புதுடெல்லி: வாரிசு அரசியலை எதிர்ப்பதாக கூறும் பாஜக, தற்போது சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜிக்கு டெல்லி பிரிவில் முக்கிய பதவியை கொடுத்துள்ளது. மறைந்த பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த சில ஆண்டுக்கு முன் காலமானார். அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ், உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பாஜகவின் டெல்லி சட்டப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக பன்சூரி ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தீவிர அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பாஜகவின் டெல்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்ட அறிக்கையில், ‘சுஷ்மா ஸ்வராஜின் மகளான பன்சூரி ஸ்வராஜ், டெல்லி சட்டப் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து பன்சூரி ஸ்வராஜ் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் டெல்லி மாநில சட்டப் பிரிவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜகவுக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். வாரிசு அரசியலை எதிர்த்து பேசிவரும் பாஜக தலைமை, தற்போது சுஷ்மா ஸ்வராஜின் மகளுக்கு ெடல்லி பிரிவுக்கு முக்கிய பதவி கொடுத்திருப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.